Headlines News :
Home » , , » ஆங்கிலேயர்கள் வருகை - சென்னை உருவாக்கம்

ஆங்கிலேயர்கள் வருகை - சென்னை உருவாக்கம்


ஆங்கிலேயர்கள்

இங்கிலாந்து நாட்டைச் சார்ந்தவர்களை ஆங்கிலேயர்கள், பரங்கியர் என்றும் வெள்ளையர்கள் என்றும் அழைக்கிறோம்.

கிபி 1588 ஆம் ஆண்டு உலகின் மிகப்பெரிய போர்க்கப்பலான ஸ்பானிய ஆர்மடா என்ற கப்பலை  தோற்கடித்து ஐரோப்பாவில் அதிக கடல் வலிமை பெற்ற நாடாக இங்கிலாந்து விளங்கியது. இதனைத்தொடர்ந்து கடல்வழிப் பயணம் மேற்கொண்டு கீழைத்திசை நாடுகளுடன் வாணிப நடவடிக்கையில் இறங்கினர் . 

 ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி

லண்டன் நகரின் லேடன் ஹால் வீதியை சேர்ந்த 100 லண்டன் நகர வியாபாரிகள் ஒன்று சேர்ந்து ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியை தோற்றுவித்ததனர். இக்கம்பனிக்கு டிசம்பர் 31 1600 ஆம் ஆண்டு இங்கிலாந்து அரசி முதலாம் எலிசபெத் வியாபாரம் செய்வதற்கான அனுமதியை வழங்கினார்.  இந்நிறுவனம் ஒரு ஆளுநராலும்,  24 இயக்குனர்களை கொண்ட குழுவாலும்  மேலாண்மை செய்யப்பட்டது.   

 அனுமதி பெறுதல்:

கிபி 1608 ஆம் ஆண்டு இங்கிலாந்து அரசர் முதலாம் ஜேம்ஸ்  வியாபாரம் செய்ய கோரிய கொடுத்த அனுமதி கடிதத்துடன் வில்லியம் ஹாக்கின்ஸ் என்ற ஆங்கில மாலுமி ஜஹாங்கீரின் அரசவைக்கு வருகை புரிந்தார் .ஆனால் போர்ச்சுகீசியர் மீது பேரரசர் கொண்டிருந்த செல்வாக்கின் காரணத்தால் அவரால் வியாபார அனுமதி பெற இயலவில்லை .

இதனை தொடர்ந்து கிபி 1615ஆம் ஆண்டு சர்தாமஸ் ரோ என்கிற மற்றொரு ஆங்கில தூதுவர் ஜஹாங்கிர் அரசவைக்கு வருகை புரிந்தார்..இவர் இந்தியாவுடன் வியாபாரம் செய்வதற்கான அனுமதியைப் பெற்றார். ஆங்கிலேயர் சூரத்தில் சில வணிக உரிமைகளைப் பெற்றனர்.சூரத்திலிருக்கும் கம்பெனிக்கு பாதுகாப்பு கோருவதே இஅவரது முக்கிய எண்ணமாக இருந்தது.

குஜராத்தின் முகலாய ஆளுநரான இளவரசர் குர்ரம் ஆங்கிலேயருக்கு வணிக உரிமைகளை வழங்கினார்.  ஆனால் இப்பகுதிகளில் போர்த்துக்கீசியர் மிகுந்த செல்வாக்குப் பெற்று இருந்ததால் ஆங்கிலேயரால் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. ஆனாலும் ஆங்கிலேயர்கள் சூரத், ஆக்ரா, அகமதாபாத் ஆகிய இடங்களில் மையங்களை ஏற்படுத்தி இந்தியாவுடன் வாணிபத்தை மேற்கொண்டனர் . 

சென்னை உருவாக்கம்:

கி.பி.1639 ஆம் ஆண்டு ஃபிரான்சிஸ் டே என்ற ஆங்கில அதிகாரி சந்திரகிரி அரசரிடமிருந்து ஒரு நிலப்பகுதியை விலைக்கு வாங்கி தற்கால சென்னை நகரை நிறுவினார். அதில் கோட்டை கட்டிக் கொள்ளும் அனுமதி வழங்கினார்.   
1640 ஆம் ஆண்டு புனித ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டது.  இந்திய மண்ணில் ஆங்கிலேய கிழக்கிந்திய வணிகக்குழு முதன்முதலாக பெற்ற நிலப் பகுதி இதுவேயாகும்.

சென்னையில் கம்பெனியின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகள் மீது 1645 ஆம் ஆண்டு கோல்கொண்டா அரசர் படையெடுத்து பாழ்படுத்தினார். 1687 இல் அவுரங்கசீப் கோல்கொண்டாவைக் கைப்பற்றி கம்பெனியின் பகுதிகளை முகலாய ஆட்சியின் கீழ் கொண்டு வந்தார்.   ஆனால் ஆங்கிலேயருக்கு ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த உரிமைகள் தொடர்ந்தன.கம்பெனியின் சோழமண்டல கடற்கரை பகுதியின் தலைமையிடமாக சென்னை மாறியது.  

சீர்வரிசையாக கிடைத்த பம்பாய் 

இங்கிலாந்து அரசர் இரண்டாம் சார்லஸ் போர்ச்சுக்கல் நாட்டு இளவரசி காத்தரின் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு சீர்வரிசையாக பம்பாய் 1668 இல் கம்பெனிக்கு வழங்கப்பட்டது.  இதனை ஆங்கில கிழக்கிந்திய கம்பெனிக்கு ஆண்டொன்றுக்கு 10 பவுண்டுக்கு வாடகைக்கு விட்டார்.  

1683 ஆம் ஆண்டு இந்திய பட்டய சட்டம் மூலம் கம்பெனிக்கு படைகளை உருவாக்கி கொள்ளவும், அமெரிக்கா , ஆபிரிக்கா, ஆசியா ஆகியவற்றில் உள்ள நாடுகளுக்கு எதிராகப் போர் அறிவிப்பு செய்யவும் அமைதி உடன்படிக்கை மேற்கொள்ளவும் உரிமை வழங்கப்பட்டது.  1684-இல் சென்னை ஒரு மாகாணமாக உருவானது.

1688 இல் சென்னை ஒரு மேயரையும்,  10 உறுப்பினர்கள் அடங்கிய ஆலோசனைக் குழுவையும் கொண்ட நகராட்சி அரசை பெற்றிருந்தது.  1693-இல் சென்னையை சுற்றியுள்ள மூன்று கிராமங்களையும், 1702-இல்  மேலும் ஐந்து கிராமங்களையும் பெற்றது..


வங்காளம்


முகலாயப் பேரரசர் அவுரங்கசீப் ஆங்கிலேயர் வங்காளத்தில் வரியற்ற வியாபாரம் செய்வதற்கான உரிமையை வழங்கினார்.1690-இல்  கம்பெனி சுதநுதி என்ற இடத்தில் தனது குடியேற்றத்தை நிறுவியது.   இவ்விடமே பிற்காலத்தில் கல்கத்தாவாயிற்று. 1696-இல்  கல்கத்தாவில்  கோட்டை கட்டப்பட்டது.  1698-இல் சுதநுதி, காளிகட்டா,  கோவிந்தபூர் ஆகிய கிராமங்களின்  ஜமீன்தாரி உரிமைகளை கம்பெனி பெற்றது.  இதற்கு பதிலாக கம்பெனி ஆண்டுதோறும் ரூபாய் 1200 செலுத்தியது.  கல்கத்தாவில் கட்டப்பட்ட புனித வில்லியம் கோட்டை 1770-இல்  மாகாணத்தின் தலைமை இடமாயிற்று.

நாரிஸ் தூதுக்குழு

இங்கிலாந்து அரசர் மூன்றாம் வில்லியம் சர் வில்லியம் நாரிஸ் என்பவரை இந்தியாவிற்கு அனுப்பி வைத்தார் .  அவர் 1698-இல் அவுரங்கசீப்பை சந்தித்தார். ஆங்கிலேய குடியேற்றங்கள் மீது ஆங்கிலேயரின் முழுமையான கட்டுப்பாட்டை பெறுவதும் ஏற்கனவே பெறப்பட்ட சிறப்பு உரிமைகளை உறுதிப்படுத்துவதும் வணிக உரிமைகளை மேலும் நீடிப்பதும் இச்சந்திப்பின் நோக்கங்களாக இருந்தன.   

ஆனால் இவ்வேண்டுகோள் 1714,  1717 ஆண்டுகளில் சுர்மன் என்பவரின் தலைமையின் கீழ் வந்த தூதுக்குழு முகலாயப் பேரரசர்  (Farruksiyar) பருக்சியாரை  சந்தித்தபோதுதான் ஏற்கப்பட்டது. சுர்மன் வணிக உரிமைகள் தொடர்பான அரசரின் ஆணையை பருக்சியாரிடமிருந்து  பெற்றார்.  இவ்வாணை குஜராத்,  ஹைதராபாத்,  வங்காளம் ஆகிய பகுதிகளில் உள்ளூர் ஆட்சியாளர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. 

பின்னர் மொகலாய மன்னர் பருக்சியார் பிறப்பித்த கட்டளையின்படி வங்காளத்தில் ஆங்கிலேயர் தொடர்ந்து வணிகம் செய்யவும் கல்கத்தாவைச் சுற்றி உள்ள 32 கிராமங்களை வாடகைக்கு எடுத்துக் கொள்வதற்கும் நாணயச் சாலை அமைத்துக் கொள்வதற்கான சலுகைகளை பெற்றனர் இவையாவும் வங்காளத்தில் பிரெஞ்சுக்காரர்களும் ஆங்கிலேயர்களும் மோதிக் கொள்வதற்கு வழிவகுத்தன.

ஆங்கிலேயர் வருகை பாடத்தை நன்றாகப் படித்துவிட்டீர்களா? இதிலிருந்து 10 வினாக்களைக் கேட்டால் உங்களால் சரியான பதிலைச் சொல்ல முடியுமா? யோசிக்க வேண்டாம்.. உடனுக்குடன் சுய பரிசோதனை செய்து பார்க்க நினைத்தால் இங்கே க்ளிக் நமது தளத்தின் EXAM CENTER சென்று தேர்வெழுதிப் பாருங்கள்.. படித்த பாடம் பளிச்சென்று மனதில் பதியும்.
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Featured Post

Tnpsc - ஐந்தாண்டு திட்டங்கள் - இந்தியப் பொருளாதாரம் - Indian Economics

1930 ஆம் ஆண்டுகளில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலகட்டத்தில் இந்திய அரசியல் அறிவு சார்ந்தவர்கள் இடையே இந்திய பொருளாதார வளர்ச்சிக்கான திட்டமிடல் கு...

Popular Posts

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. V - All Rights Reserved
Template Design by Creating Website Published by Mas Template